ஞாயிறு, 18 அக்டோபர், 2009

சுரர் யார் ?

சுரர் யார் ?

மறைமலை அடிகளாரின் படப்பிடிப்பு

"சோமப் பூண்டின் சாற்றினாற் சமைத்தக்கள்ளை மிகுதியாய்ப் பருகி வெறித்திருந்தன ரென்பதும் சூதாட்டத்தில் நிரம்ப இறங்கி பலவகையான அல்லலுக்கு இரையாகின ரென்பதும் இருக்கு வேதத்திற் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன." (the leading vices of the aryan race have always been drinking and gambling. The rig veda bears ample witness to both "vedic india" by Zenaide A.Ragozin-page875)


கடும் புயற்காற்றைப் போல , யான் பருகியிருக்குங்கள் என்னை உயரத் தூக்கிச் செல்கின்றது ; யான் சோமச் சாற்றை பருகியிருக்கின்றேன் அல்லேனோ ?

விரைந்து பறக்குங் குதிரைகள் ஒரு தேரை இழுத்துச் செல்வது போல், யான் பருகியிருக்குஞ் சாறு என்னை மேலே சுமந்து செல்கின்றது ; யான் சோமச் சாற்றைப் பருகியிருக்கின்றேன் அலேனோ ! ஆ! இவ்வகன்ற மண்ணுலகைப் பெயர்த்தெடுத்து இங்கேயாவது அங்கேயாவது வைப்பேன் . யான் சோமச்சாற்றைப் பருகியிருக்கின்றெனல்லேனோ. இவையெல்லாம் "சோம பானம் " எனும் அக்கால உற்சாக பானம் குடித்த ஆரியனின் அனுபவ உரைகள் (படிக்க - ரிக் மண்டலம் 10 ரிக்குகள் 116)

மூஜவான் மலையில் வளரும் சோமப்பூண்டின் மிகுந்த கள்ளைவிட, என்றும் உறங்காத , இச்சூதுகாய் என் மனத்திற்கு மிக்க இன்பத்தைத் தருகின்றது.

முடிவாக மிஞ்சிய ஒரு சிறு முனையையுடைய இச்சூதுகாயின் பொருட்டு என் மனைவியையும் யான் நீக்கிவிட்டேன்.

தன் செல்வமெல்லாம் சூதுகாய் என்னும் விரைந்த குதிரையாற் கவரப்பட்டவன்றன் மனைவியை ஆடவர் பிறர் தழுவுகின்றார்.''

சூதாடிச் சொக்கனான ஆரியன் தன் மனைவியை மாற்றார் தழுவுவதைப் பற்றிப் புலம்பியவை இவை(பார்க்க - ரிக்வேதம் 10 ஆம் மண்டிலம் 34)

இவர்கள் அசுரர்கள்

இந்தச் சுரர்கள்தாம் நம்மை அசுரர்கள் என்றனர்.'அ' சேர்த்து எதிர்ப்பெயராக்கினர்.அதாவது, சுரா பானம் குடிக்காதவர்கள் நாம்! எனவே அசுரர்கள்!

கள்ளுண்ணாமை பற்றிப் பத்துப் பாடல்கள் வள்ளுவர் எழுதியிருக்கிறார்.

அது பற்றிப் பத்துப் பாடல்கள் திருக்குறளில் உள்ளன.

நாம் அசுரர்கள்தான்! பொருத்தமான பெயர்தான்!

(ரிக் வேத வரிகளின் தமிழாக்கம் தமிழ்க்கடல் மறை மலை அடிகளாரின் "மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும்" எனும் நூலில் உள்ளவாறு)

சுரர்களின் ஒழுக்கம்

மறை மலை அடிகள் எழுதுகிறார்."சூதாட்டப் பாட்டுகள்,வேள்வியில் உயிர்களைக் கொல்லும் பூசாரிப் பாட்டுகள்,தமிழர் மேற் போரிடுமுன் இந்திரனை வேண்டி பாடியப் பாட்டுகள் போல்வனவே மிகுதியும் நிரம்பிய இருக்கு முதலான ஆரிய நூல்கள்தாம் சிவபெருமான் அருளிச் செய்தனவாம்!"

வேதகாலத்தில்தான் அப்படி என்றெல்லாம் யாராவது கூறினால் பாரத காலத்திலும் அப்படித்தான் என்பதை உணர வேண்டும். தசராவும் தீபாவளியும் சூதாட்டத்திற்கென்றே ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள் என்பதை வடபுலம் இன்றளவும் என்பித்துக் கொண்டிருக்கிறது. தெற்கே வந்து வணிகம் செய்தோ, வட்டி வாங்கியோ கொலுத்துக் கொண்டிறுக்கும் வடநாட்டார்களும் இந்த விழாக் காலங்களில் சூதாடுவதைக் கடமையாகக் கொண்டிருக்கின்றனர்.

அசுரர் ஒழுக்கம் எப்படி?

"ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி" எனும் திருக்குறளும்
பொருள் கொடுத்துப் பொய்மேற் கொளீ இ அருள்கெடுத்து

அல்லல உழப்பிக்குஞ் சூது" எனும் திருக்குறளும் அசுரர் ஒழுக்கத்திற்குச் சான்றுகள்.

குடித்தவன் தன் தாய் முன்பு வருவதே கொடுமை எனும்ப்போது கற்றோர் முன் எப்படி வரமுடியும்? தன் மகன் செய்யும் எதையும் பொறுத்துக் கொள்ளும் தாய் கூட கள் குடிப்பதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்கிறது அசுரர் அறநூல். அதே போன்று, சூதாடுபவனின் சொத்தெல்லாம் போய், பொய் பேசிடச் செய்வதோடு, எல்லையற்ற துன்பத்தைத் தரும் என்றும் வென்றால் கூட சூதாடாதே அது தங்கத் தூண்டிலை மீன் கவ்வியது போல ஆடுபவனை அழித்துவிடும் என்பது அசுரர்களின் அறநூலாகிய குறள்நூல் கூறும் கருத்தாகும்.

சுரர்களின் ஒழுக்ககேடு

கள்ளுண்டு,காமம் மிகுந்து சுரர்கள் என்னென்ன செய்தனர் எனப் பட்டியலிடுகிறார். மறைமலையடிகள் தம் ''மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும்'' என்ற நூலில்!

" ஆரிய மாந்தரும் அவரால் தெய்வமாகக் கொள்ளப்பட்டோரும் செய்த காமப்புன்செயல்கள் அவரெழுதி வைத்த நூல்களிலேயே காணப்படுகின்றன.பிரஜாபதி காமங் காழ்ப்பேறித் தன் புதல்வியைப் புணர்ந்து, பின்னர்த்தான் செய்த அத் தீவினைய நினத்து மிக வருந்தினமை சதபதபிரமாணம் (1,7,4) அய்தரேய பிரமாணம் (3 13 ) மத்ஸ்யபுராணம் (3-32,49) முதலிய நூல்களில் வெளிப்படையாகச் சொல்லப் பட்டிக்கின்றது. இந்திரன் அங்ஙனமே வெறி கொண்டு கவுதம முனிவரின் மனைவியான அகலிகையைப் புணர்ந்தமை இராமாயண உத்தர காண்டத்தில் (௩0 ௧௯, ௩௧ ) குறிக்கப்பட்டிருக்கின்றது. விவஸ்வான் புதல்வரான யமனும் யமியும் தமையனுந் தங்கையுமா யிருந்தும், யமி தன் தமையனைப் புணர முயன்றமை இருக்கு வேதத்திலேயே (1010) நன்கெடுத்துச் சொல்லப்பட்டது. "

"வருணப் பிரகாசம் என்னும் வேள்வியை வேட்கும் குரவன் தன் மனைவி பலரைக் கூடியிருக்க வேண்டுமெனக் கருதி, அவளை அவன் வேள்விக் களத்திற்குக் கொண்டு வருகையில் நீ எவ்வெவரோடு கூடியிருந்தனை?' எனக் கேட்டு அவள் வாய்மொழி வினவுதலைச் சதபத பிரமாணம் (2, 5,2,20 ) கூறுதல் கொண்டும் பண்டை ஆரியப் பார்ப்பன மாதரின் காம வொழுக்கம் இனைத்தென்பது துணியப்படு கின்றதன்றோ?" என்று மேலும் சுரர்களின் ஒழுக்கச் "சிறப்பை" மறைமலை அடிகள் விளக்குகின்றார்.

இப்பேர்பட்ட குடிகேடர்கள், சூதாடிகள், காம வெறியர்கள்தாம் சுரர்கள். இவையேதும் இல்லாத மக்களை இக் கேடர்கள் அசுரர்கள் எனக் குறிப்பிடத் தொடங்கி தஸ்யுக்கள், தாசர்கள், இராட்சதர்கள் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அசுரர்களை, இராக்கதர்களைக் கொன்றமை எனப் புனைகதை எழுதி வைத்து விழாக் கொண்டாடுகின்றனர். அதன் வழியே, நவராத்திரி, தீபாவளி விழாக்கள் சுரர்களால் அசுரர்கள் அழிக்கப்பட்டனர் எனும் வெற்றி விழாக்கள் என "அவாளால்" வழங்கப்படுகின்றன. இம் மயக்கம் தெளிந்து மதிபெறும் நாள் நம்மவர்க்கு வரும் நாள் எந்நாளோ?

(அடிப்படை : மாணிக்கவாசகர் - வரலாறும் காலமும் இரண்டாம் பகுதி )













சனி, 17 அக்டோபர், 2009

தீபாவளி என்றால் என்ன? - பெரியார் பேசுகிறார்.

தீபாவளி என்றால் என்ன? - பெரியார் பேசுகிறார்.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அனேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள். என்றாலும் இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்.

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள் தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல ;தமிழர் ( திராவிடர் ) ஆரிய இனத்தானுக்கு அடிமை ,அவனது தலைமைக்கு அடிமை ,மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது .

"மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன் ; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்"என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது .

வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டு மிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களைத் தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று ,அவற்றிற்கு அடிமையாகி , பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறர்கள்

அதன் பயனாய் , அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக , மதமாக , நீதி நெறிகளாக பண்டிகை விரதம் , நோன்பு - உற்சவங்களாக நல்ல நாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்த்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஓர் அளவுக்குத் தலைக்கீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும் கூட இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞான்மும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்.

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம் இரண்டகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கி விட்டார்களேயானால் எப்படி யார் எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப் புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுகிறார்களோ அதே போல் நடந்து கொள்கிறார்கள்.

படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு இல்லையே

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில் இங்லீஷ் விஞ்ஞான்த்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு ,சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும் , மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக்கட்டாக கூற முடியும் ?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நம் மக்களுக்கு இந்த , இப்படி பட்ட மடமையை உணரும் அளவுக்கூட அறிவைக் கொடுக்கவில்லை என்றால் இக்கல்வி கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளை நிலம் என்பதை தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும் ? இதில் வதியும் பயிலும் மாணவர்களுக்கு எந்த விதத்தில்தான் மானமும் அறிவும் விளைய முடியும் ?

தீபாவளி என்றால் என்ன? ( புராணம் கூறுவது )

. ஒருகாலத்தில் ஒரு அசுரன் உலகத்தை பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்துக் கொண்டன்.

.தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரனுடன் போர் துவங்கினார்.

. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசுரடனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

௧0. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக ) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்தப் பத்து செய்திகள்தான் தமிழரைத் தீபாவளி கொண்டாட செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

பார்ப்பான் சொன்னால் நம்ப வேண்டுமா?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கக்கத்திலோ தலை மீதோ எடுத்துப் போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்தால் பூமிக்கு பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? இவற்றைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவை ஒன்றையும் சிந்திக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் நடு சாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும் புதுத்துணி உடுத்துவதும் பட்டாசு சுடுவதும் அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து "கங்காஸ்நானம் ஆயிற்றா?" என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும் அவன் போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நங்உ சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.